Tag Archives: Fish

மருத்துவ குணம் வாய்ந்த கேரை மீன் சீஸன் குமரியில் தொடக்கம்: Overseas export of 80 tonnes per day

colachal-fish

கன்னியாகுமரி கடல் பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த கேரை மீன் சீஸன் தொடங்கியுள்ளது. வெளிநாடுகளுக்கு தினமும் 80 டன்னுக்கு மேல் இவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றை கொள்முதல் செய்வதற்காக கேரள மீன் வியாபாரிகள், குமரி மீன்பிடி துறைமுகங்களில் குவிகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், குளச்சல், தேங்காப்பட்டிணம், முட்டம் ஆகியவற்றை தங்குதளமாக கொண்டு விசைப்படகுகள் மீன்பிடித்து வருகின்றன. ஆழ்கடல் மீன்பிடித்தலில் தனித்திறன் வாய்ந்த மீனவர்கள் குமரியில் அதிகம் உள்ளனர். குறிப்பாக ஆழ்கடலுக்கு சென்று சூறை மீன் பிடிப்பது, குமரி கடல் பகுதிகளில் தற்போதும் அதிகம் நடக்கிறது.

பிற கடலோர பகுதிகளை விட, குமரி கடல் பகுதியில் பிடிபடும் மீன்களுக்கு சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் கூடுதல் சுவையுடன் இருப்பதால், இவற்றை வெளிநாட்டினர் விரும்பி வாங்குகின்றனர்.

கேரை மீன் வரத்து அதிகம்

சமீபத்தில் கணவாய், இறால் ஆகிய மீன்கள் குமரியிலிருந்து பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது குளச்சல், சின்னமுட்டம், தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுகங்களில் கேரை மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. ஆழ்கடலுக்கு சென்று விட்டு கரை திரும்பும் விசைப்படகுகள் மூலம் டன் கணக்கில் இம்மீன்கள் கொண்டு வந்து இறக்கப்படுகின்றன. குறிப்பாக குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இந்த மீன்கள் வரத்து அதிகம் உள்ளது.

குமரி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கேரை மீன்களை கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அங்கு விற்றது போக, எஞ்சிய மீன்களை அரபு நாடுகள் மற்றும் பிற வெளிநாடுகளுக்கு திருவனந்தபுரத்திலிருந்து ஏற்றுமதி செய்கின்றனர்.

மருத்துவ குணம் வாய்ந்தது

இதுகுறித்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த மீனவர் சேவியர் கூறும் போது, ‘‘கேரை மீனை பொறுத்தவரை ஆஸ்துமா, முதுகுவலி, இருதய கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு நல்ல நிவாரணமளிக்கும் தன்மை வாய்ந்தது. இறைச்சி போன்ற சுவையும் இதில் நிறைந்துள்ளது.

ஒரு மீன் குறைந்த பட்சம் 25 கிலோ முதல் அதிக பட்சம் 60 கிலோ எடையுடன் உள்ளது. கிலோ ரூ.70-க்கு மேல் விற்பனையாகிறது. சராசரியாக ஒரு கேரை மீன் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் விருந்து உள்ளிட்ட ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கு முக்கிய உணவாக கேரை மீன்களை பயன்படுத்துகின்றனர். அங்கு இவற்றுக்கு நல்ல மவுசு இருப்பதால், ஏற்றுமதி செய்வதற்காக கேரள வியாபாரிகள் கேரை மீன்களை போட்டிபோட்டு வாங்குகின்றனர். இதனால் இந்த சீஸனில் விசைப்படகு மீனவர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது’’ என்றார்.

80 டன் ஏற்றுமதி

மீன்வள அதிகாரிகள் கூறும்போது, ‘‘குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மீன்பிடி துறைமுகங்களிலும் இருந்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தினமும் 80 டன் கேரை மீன்கள், கேரள வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படு கிறது’’ என்றனர்.

Kanyakumari Fishing: தடைகாலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் உயர் ரக மீன்கள் சிக்கின வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்

colachel-fish

தடைகாலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் உயர் ரக மீன்கள் சிக்கின. அந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர்.

தடைகாலம்

ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் ஆகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் மற்றும் மீன் பிடி கப்பல்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அழிந்து விடும் என கருதி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி நள்ளிரவு வரை, தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல இந்த ஆண்டுக்கான தடை காலம் கடந்த 29-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் மாதா வணக்கம் திருவிழா நேற்று முன்தினம் வரை நடைபெற்றது.

மீன் பிடிக்க சென்றனர்

இதைத்தொடர்ந்து சின்னமுட்டம் மீனவர்கள் தடைகாலத்திற்கு பிறகு நேற்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சின்னமுட்டத்தில் இருந்து 250 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன.

காலையில் இருந்து மாலை வரை மீனவர்கள் கடலில் மீன்களை பிடித்துக்கொண்டு கரைக்கு புறப்பட்டனர். மாலை 6.30 மணி முதல் சின்னமுட்டம் துறைமுகத்துக்கு மீனவர்களின் படகுகள் வரத்தொடங்கின. அதைத்தொடர்ந்து வரிசையாக படகுகள் வந்தன.

உயர் ரக மீன்கள் சிக்கின

உடனே மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை 50 கிலோ எடையுள்ள பாக்ஸ் மற்றும் குட்டைகளில் எடுத்துக்கொண்டு தலையில் சுமந்தபடி ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்தனர்.

கரைக்கு திரும்பிய மீனவர்களின் வலையில் உயர் ரக மீன்களான நெய் மீன், பாறை, கணவாய் மற்றும் நவரை, கோவாஞ்சி, வெளமின், பண்டாரி, பூ மீன், சாளை ஆகியவை ஏராளமாக சிக்கி இருந்தன. இவற்றில் கணவாய், நவரை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

போட்டி போட்டு ஏலம்

மீன் ஏலக்கூடத்தில் குமரி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும் ஏராளமானவர்கள் மீன்களை ஏலம் எடுக்க காத்து இருந்தனர்.

மீன்கள் ஏலக்கூடத்துக்கு வந்ததும், அந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 50 கிலோ எடை கொண்ட நவரை பாக்ஸ் ரூ.2 ஆயிரத்துக்கும், 10 கிலோ எடை கொண்ட பண்டாரி ஒரு மீன் ரூ.3,500-க்கு ஏலம் போனது. புள்ளி கணவாய் 10 கிலோ ரூ.5 ஆயிரத்துக்கும் போனது. பாறை மீன் ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று களை கட்டியது.

விலை கட்டுப்படியாகவில்லை

கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்த கன்னியாகுமரி மீனவர் சிலுவை கூறியதாவது:-

45 நாள் தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்றோம். மீன்கள் அதிக அளவு கிடைத்தது. ஆனால் நவரை, கணவாய் போன்ற மீன்கள் குறைவாகவே கிடைத்தன. ஆனால் விலை கட்டுப்படியாகவில்லை. நாங்கள் படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவதற்கு டீசல் மற்றும் மீனவர்களுக்கான கூலியே அதிகமாகிறது. இதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் குறைவாகவே உள்ளது.

இவ்வாறு மீனவர் சிலுவை கூறினார்.

அதே சமயம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த வியாபாரி செல்வம் கூறியதாவது:-

சின்னமுட்டத்துக்கு மீன் கொள்முதல் செய்வதற்காக வந்தேன். மீன்கள் அதிகம் கிடைத்து உள்ளது. அதே நேரத்தில் அதன் விலையும் அதிகமாக உள்ளது. நவரை ஒரு பாக்ஸ் ரூ.1,500-க்கு ஏலம் எடுப்போம். ஆனால் இந்த முறை ரூ.2 ஆயிரத்துக்கு எடுத்தோம்.

இவ்வாறு செல்வம் கூறினார்.