Tag Archives: chennai-kanyakumari-express-breaks-the-wall-and-rams-in-to-the-platform

கன்னியாகுமரியில் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு பிளாட்பாரத்தில் ஏறிய எக்ஸ்பிரஸ் ரெயில்

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம் போல இன்று காலை 7 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையம் வந்தது. 2–வது பிளாட்பாரத்தில் நின்று பயணிகளை இறக்கி விட்ட பின்னர் இந்த ரெயில் 8 மணிக்கு பெங்களூருக்கு இயக்கப்பட இருந்தது.

இதற்காக, என்ஜின் டிரைவரான மதுரையை சேர்ந்த சட்டநாதன் என்பவர் ரெயிலை 4–வதுபிளாட்பாரத்திற்கு கொண்டு வந்தார். அப்போது தண்டவாளத்தில் பின்னோக்கி வந்து கொண்டிருந்த ரெயில் திடீரென அங்கிருந்த தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு பிளாட் பாரம் மீது ஏறியது.

இதில் ரெயிலின் கடைசி 2 பெட்டிகள் சுமார் 15 மீட்டர் தூரத்திற்கு பிளாட்பாரம் மீது ஏறி நின்றது. அதிர்ஷ்டவசமாக ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றுவிட்டதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் ரெயில் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பிளாட் பாரம் மீது ஏறிய போது பயங்கர சத்தம் கேட்டது. இதைக் கேட்ட பயணிகள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கன்னியாகுமரி ரெயில் நிலைய மேலாளர் பெஸ்டஸ் வில்சன், ரெயில்வே பாதுகாப்பு படை சப்–இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பிளாட்பாரம் மீது ஏறிய ரெயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து காலை 8 மணிக்கு பெங்களூருக்கு இயக்கப்பட வேண்டிய ரெயில் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த ரெயிலில் செல்வதற்காக வந்திருந்த பயணிகள் நீண்ட நேரம் காத்து நின்றனர்.

Source : maalaimalar