Category Archives: Yoga

கன்னியாகுமரி : “நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம்

“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 2 – கன்னியாகுமரி

சத்குரு அவர்கள் பேசிய போது, “நாம் கண்களை மூடிக் கொண்டுவிட்டால், பிரச்சினை போய்விடாது. நம் உயிர் வேண்டுமானால் போகலாம், ஆனால் பிரச்சினை அவ்வாறே இருக்கும். அதை அடுத்த தலைமுறையினரின் தலையில் நாம் இறக்கிவிடுவோம். இது மிகவும் பொறுப்பற்ற செயல். பாகிஸ்தானுடன் போர் நடந்தபோதுகூட இத்தனை பேர் இறந்திருக்க மாட்டார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 3,00,000 விவசாயிகள் – நாம் உண்ண நமக்கு உணவளித்த விவசாயிகள் – தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் உண்ண உணவின்றி, தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இது நமக்கு பெரிய தலைக்குனிவு. இலையும், ஆடு/மாடு சாணமும்தான் மக்கி மண்ணாகிறது. என்றோ மரமில்லாமல் செய்துவிட்டோம். இப்போது விலங்கினங்களையும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். காடில்லாமல் மழையில்லை. மழையில்லாமல் தண்ணி இல்லை. இப்படி மண்ணையும் தண்ணியையும் தொலைத்துவிட்டு குழந்தைகளுக்கு எதை விட்டுச் செல்வது? இன்றே இதற்கான செயலில் இறங்கினால்தான் 15-20 வருடத்தில் பலன் கிடைக்கும்” என்றார்.

எதிரியை வெற்றிகொள்வது எப்படி?

ஆதிகாலம் தொட்டு இன்று வரை நடந்துகொண்டிருக்கும் நிதர்சனம் இது – நமக்கு வேண்டப்படாதவரோ அல்லது நம் எதிரியோ அவர் வாழ்க்கையில் சரிவை சந்தித்தால் நமக்கு மகிழ்ச்சிதான். அந்த எதிரியையும் வெற்றிகண்டு நாம் வாழ்வில் உயர்வது எப்படி? இக்கட்டுரையில் தெளிவுபடுத்துகிறார் சத்குரு…

வெளியே தொடர்ந்து வேட்டுச் சத்தம் கேட்டது. காரணம் கேட்டேன். யாரோ ஒரு நடிகரின் படம் தோல்வியடைந்துவிட்டதாம். இன்னொரு நடிகரின் ரசிகர் மன்றம் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதாகச் சொன்னார்கள். என்ன அபத்தம் இது?

கால்பந்து விளையாடப் போகிறீர்கள். உங்களுக்கு எதிராக ஒரு அணி இருக்கும். அது உங்களைவிட திறமையான அணியாக இருந்தால், உங்களை கோல் போடவிடாமல் தடுக்கும். நீங்கள் அசந்த நேரம் உங்கள் பக்கம் கோல் போட்டுவிடும். அதற்காக அந்த அணியை எதிரியாக நினைத்து, மைதானத்தை விட்டே துரத்திவிடுவீர்களா என்ன?

எதிர்க்க இன்னொரு அணியே இல்லை என்றால், நீங்கள் நினைத்த நேரத்தில் பந்தை எடுத்துக் கொண்டு எதிர்ப்பக்கம் போகலாம். அங்கேயிருக்கும் இரண்டு கம்பங்களுக்கு நடுவில் எத்தனை தடவை வேண்டுமானாலும் உதைத்து கோல் போடலாம். ஆனால், அதன் பெயர் கால்பந்தாட்டமா? அல்லது, வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும் என்பதற்காக, உங்களுக்கு இணையாக இல்லாத கற்றுக்குட்டிகளுடன் மட்டும் விளையாடிக் கொண்டிருப்பீர்களா?

யமகுசி என்ன செய்தார்?

யமகுசி, கராத்தேயில் மிகச் சிறந்த வீரர். பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்தவர். ஒருமுறை போட்டியில் அவர் தன் குருவையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தனக்குத் தெரிந்த அத்தனை விதத்திலும் முயற்சி செய்தார் யமகுசி. குருவை வீழ்த்த முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமை இழந்தார் யமகுசி. கோபத்தில் தவறான சில வீச்சுகளை முயற்சி செய்ததில், நிறைய காயங்களானதுதான் மிச்சம்.போட்டி முடிந்ததும், குருவைப் பணிந்து தன் தோல்விக்குக் காரணம் கேட்டார்.
“நீ என்னை எப்படிப் பார்த்தாய், மகனே?”
“போட்டியென்று வந்துவிட்டால், குரு, சிஷ்யன் எல்லாம் கிடையாது. உங்கள் பலவீனங்களை கண்டுபிடித்து உங்களை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்றுதான் பார்த்தேன். ஆனாலும், முடியவில்லையே குருவே!”
ஒரு தரையில் ஒரு கோடு வரைந்தார்.
“இதை சிறிதாக்க வேண்டுமானால், என்ன செய்வாய்?”
யமகுசி அந்தக் கோட்டின் ஒரு பகுதியை அழித்துக் காட்டினார்.
“இதே கோடு அழிக்க முடியாதபடி பாறையில் இருந்தால்?”
யமகுசிக்கு விடை சொல்லத் தெரியவில்லை.
குரு அந்தக் கோட்டின் பக்கத்தில் அதைவிட ஒரு பெரிய கோடு வரைந்தார்.
“இப்போது முதல் கோடு சிறியதாகி விட்டதல்லவா? யாரையாவது வெற்றி கொள்ள வேண்டுமானால், அவனைத் தாழ்த்த வேண்டுமென்று முயற்சி செய்யாதே! அவனைவிட அதிகமான உன் திறமையை வளர்த்துக் கொள். உனக்காக விளையாடு. அவனுக்கு எதிராக விளையாடாதே!”
யமகுசி தெளிவடைந்தார்.

நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும், போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுடன் போட்டு போடுபவரை உங்கள் எதிரியாகப் பார்ததீர்களானால், உங்கள் நிம்மதி தொலைந்து போகும்.
யார் முட்டாள்?
தெருவில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். முன்பின் தெரியாத ஒருவர் உங்கள் பக்கத்தில் வந்து, காதருகில் ‘முட்டாள்’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். உடனே உங்கள் ரத்தம் கொதிக்கும். அப்படிச் சொன்னவர்கள் உங்களைவிடச் சிறியவராக இருந்தால், சண்டைக்குப் போவீர்கள். வலியவராக இருந்தால்?
காலையில் எழுந்திருக்கிறீர்கள். ஜன்னலைத் திறக்கிறீர்கள். அவர் இப்போது எதுவும் செய்ய வேண்டாம். காறித் துப்ப வேண்டாம். கல் எடுத்து அடிக்க வேண்டாம். சும்மா நின்றிருந்தாலே போதும். உங்களுக்குப் படபடப்பு வந்துவிடுமல்லவா? காரியங்கள் தாறுமாறாகிவிடுமல்லவா?
அவர் வலியவரோ, எளியவரோ… ஆனால், சொன்னபடி உங்களை முட்டாளாக்கிக் காட்டிவிட்டார் அல்லவா?

நீங்கள் நண்பர் என்று நினைப்பவருக்குக் கூட இவ்வளவு சக்தி இல்லையே? யாரையாவது நீங்கள் எதிரியாக நினைத்தால், அவர் ஆற்றல் மிகுந்தவராகி விடுவதைக் கவனித்தீர்களா?
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்… நீங்கள் இங்கே யாருடனும் போர் புரிவதற்காக வரவில்லை. ஒருவரை அழித்தால், அடுத்தவர் தலை தூக்கிக் கொண்டு நின்றிருப்பார். உங்கள் ஆற்றலின் பெரும்பகுதி ஆக்கப்பூர்வமாய்ப் பயன்படாமல், அழிப்பதிலேயே வீணாகிவிடும்.
அடுத்தவரை எதிரியாக நினைக்காதீர்கள்.
பொறாமைக்கும், அச்சத்துக்கும் இடம் கொடுத்தால் உங்கள் திறமைதான் மழுங்கிப்போகும். எனவே, நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுக்காக இருக்கட்டும். இன்னொருத்தருக்கு எதிராக இருக்க வேண்டாம். அப்போதுதான், உங்களுக்கான சிகரத்தைச் சென்றடையும்வரை அந்தப் பயணம் ஆனந்தமாயிருக்கும்.
முழுத்திறமையும் வெளிப்படுத்தும் விதமாகச் செயல்படுவதில்தான் உண்மையான வெற்றியே இருக்கிறது. அதற்கு உங்கள் உடல், மனம் – இரண்டின் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்து இருக்க வேண்டும்.
இதற்கு முறையான யோகாவை விடச் சிறந்த சாதனம் இல்லை.

Angamardhana – The Route to Healthy body

‘ஜிம்முக்குப் போறேன்’ என்று பலரும், equipments (உடற்பயிற்சி கருவிகள்) வாங்கி வீட்டிலேயே ப்ராக்டிஸ் பண்றேன்னு சிலரும், மூச்சு இறைக்க, நரம்பு புடைக்க உடற்பயிற்சி செய்வதைப் பார்க்கிறோம். ஆனால், அன்றைய யோகிகள் இது எதுவும் இல்லாமல் எப்படி தங்கள் உடலைக் கட்டுமஸ்தாக வைத்திருந்தார்கள்?! இதோ விடை சொல்ல வருகிறது ‘அங்கமர்தனா’. தொடர்ந்து படியுங்கள்!


சத்குரு:

‘அங்கமர்தனா’ என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த யோக வழிமுறை. ஆனால் இப்போது அது முற்றிலுமாக மறைந்துவிட்டது. அந்த அற்புத செயல்முறையை இப்போது ஈஷாவில் மீண்டும் கற்றுக் கொடுத்து புத்துயிரூட்டி வருகிறோம். அங்கமர்தனாவில், உங்கள் உடல் எடையையும் விசையையும் பயன்படுத்தி, சில நாட்களுக்குள் உங்கள் தசைகளின் வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறீர்கள். இது வெறும் 25 நிமிட செய்முறைதான்.

“அங்கமர்தனா” என்றால் உங்கள் உடல் அங்கங்களின் மேல் ஒரு ஆளுமை கொண்டு வருவது என்று பொருள். இந்த உலகில் நீங்கள் எந்தவொரு செயலைச் செய்தாலும், அது நீங்கள் உங்கள் உடல் அங்கங்களின் மேல் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறீர்கள் என்பதைப் பொருத்துதான் அந்த செயலின் வெற்றி தீர்மானிக்கப்படும். உங்களின் விடுதலைக்கும், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் விடுதலைக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்களின் அங்கங்களின் மேல் ஒரு ஆளுமை இருந்தால்தான் அதைச் செய்ய முடியும். உங்கள் அங்கங்களின் மேல் ஆளுமை என்றால், நீங்கள் ஏதோ தசை வலிமை உள்ளவராகவோ அல்லது மலை மேல் ஏறுபவராகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுவும் நடக்கலாம், ஆனால் அடிப்படையில், உங்கள் சக்தியின் கட்டமைப்பை உறுதிப்படுத்துவதுதான் இதன் நோக்கமே.

ஒரு உடற்பயிற்சி என்ற நிலையிலிருந்து பார்த்தாலும், அங்கமர்தனா ஒரு வெற்றிகரமான பயிற்சிதான். ஆனால், தசைகளை வலுவூட்டுவதும், உடலின் கொழுப்புச்சத்தை குறைப்பதும் இதன் பக்க பலன்கள் மட்டுமே. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் எந்த ஒரு சாதனா செய்தாலும், அது அங்கமர்தனாவோ அல்லது வேறு எதோவொரு சாதனாவாக இருந்தாலும் சரி, நாம் நம் சக்தி நிலையில் ஒரு குறிப்பிட்ட ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறோம் என்பதே உண்மை.

மேலும் படிக்க…

http://tamilblog.ishafoundation.org/udalai-thangamaakkum-angamardhana/